சாயல்குடி அருகே வாலிநோக்கம் உப்பு நிறுவனத் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் ஊக்கத் தொகை வழங்காததைக் கண்டித்து, நிறுவனத்தின் முன் சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் கருப்பு கொடியுடன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 20 சதவீதம் வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
இதனால் ஊக்கத்தொகை வழங்கக் கோரி, தொழிலாளர்களுடன் சேர்ந்து சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் உப்பு நிறுவனத்தின் முன்பாக கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலர் எம். சிவாஜி தலைமை வகித்தார். சங்கத் தலைவர் கே. பச்சம்மாள், பொருளாளர் திருமால் உள்ளிட்ட 500-க்கும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். அதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தொழிலாளர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.