ராமநாதபுரத்தில் விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் திங்கள்கிழமை அரசுப்பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூருக்கு அருகேயுள்ள வங்காருபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்லையா மகன் ரவி(22).
விவசாயியான இவர் பார்த்திபனூரிலிருந்து தனது சொந்த ஊரான வங்காருபுரத்துக்கு சென்றபோது பேருந்து படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். கடந்த 2002-இல் நடந்த இச்சம்பவம் தொடர்பாக பார்த்திபனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த ரவியின் தாயார் ராக்கம்மாள் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2004 ஆம் ஆண்டு ரூ.1.59 லட்சம் இழப்பீடாக வழங்கிடுமாறு உத்தரவிட்டது.
அதில் அரசுப் போக்குவரத்துக் கழகம் முதல் தவணையாக ரூ.1.16 லட்சத்தை வழங்கியிருந்தது. மீதத் தொகை ரூ.43 ஆயிரம் வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் ராக்கம்மாள் நிலுவைத்தொகை ரூ.43 ஆயிரத்தை வழங்காமல் இருந்து வருவதாகவும் அத்தொகையை வட்டி சேர்த்து பெற்றுத் தருமாறும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரும் மனுவை தாக்கல் செய்தார்.
இதன்பேரில் அரசுப்பேருந்து ஒன்றை ஜப்தி செய்யுமாறு
ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் காரைக்குடி செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப்பேருந்தை நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தியுள்ளனர்.