ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு ரத்த பரிசோதனைக் கருவி
தினமணி செய்தி எதிரொலியாக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மேலும் ஒரு நவீன ரத்தப் பரிசோதனைக் கருவி திங்கள்கிழமை நிறுவப்பட்டு உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்யும் செல்கவுண்டர் எனப்படும் கருவி ஒன்று மட்டும் இருந்ததால் உடனடியாக ரத்த பரிசோதனை முடிவுகளை நோயாளிகளுக்கு வழங்க முடியாத நிலை இருந்து வந்தது.
இந்த கருவியால் ஒரு நாளைக்கு 100 முதல் 150 பேர் வரை மட்டுமே ரத்த பரிசோதனை செய்ய முடியும். ஆனால் 400 பேருக்கு ரத்த பரிசோதனை செய்ய மேலும் ஒரு செல்கவுண்டர் கருவி தேவைப்பட்டது.
இக்குறையை தினமணி கடந்த 21 ஆம் தேதி (சனிக்கிழமை) செய்தியாக வெளியிட்டிருந்தது. இச்செய்தியின் எதிரொலியாக இக்குறையை தீர்க்கும் வகையில் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை மேலும் ஒரு செல் கவுண்டர் கருவி நிறுவப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் மதிப்பிலான இக்கருவி சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்டு உடனடியாக நிறுவப்பட்டது. இக்கருவியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் இயக்கி வைத்தார்.
நோயாளிகளுக்கு உடனுக்குடன் ரத்த பரிசோதனை முடிவுகளை தாமதம் இல்லாமல் தெரிவிக்குமாறும் ரத்த பரிசோதகர்களை அவர் கேட்டுக் கொண்டார். ஆட்சியரது ஆய்வின் போது ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர்.கே.ஜவஹர்லால் உடன் இருந்தார்.