ராமேசுவரம் நகராட்சி பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராமேசுவரம் நகராட்சியில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் மின் மோட்டார் இயக்க ஊழியராகப் பணியாற்றியவர் எஸ்.பிரபா(23) இவரது கணவர் சேகர் இறந்துவிட்டதால் இரு குழந்தைகளுடன் காந்தி நகர் பகுதியில் வசித்து வந்துள்ளர்.
இந்நிலையில், அதிகாலையில் எழுந்து மின்மோட்டர் இயக்கச் செல்ல வேண்டி உள்ளதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, உணவு சமைத்துக் கொடுப்பது என சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளர். இதனால் தனது பணியை மாற்றி தருமாறு வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் நிர்வாகம் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் பணிக்குச் சென்று வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு பணிக்கு சென்ற அவர் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். பின்னர் அவர் மீட்கப்பட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்த பின் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நகர் காவல்துறை உதவி ஆய்வாளர் உலகநாதன் வழக்குப் பதிவு செய்து நகராட்சி சக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.