முதுகுளத்தூர் அருகே திருட்டு மணல் அள்ளிய 4 டிராக்டர்கள், ஒரு மணல் அள்ளும் இயந்திரத்தை சிறப்பு தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். ஓட்டுநர்கள் தப்பியோடிவிட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூர் காவல் சரகத்தைச்சேர்ந்த சவேரியார்பட்டிணம் கிராமத்தில் ஒரு கும்பல் வாகனங்களில் திருட்டு மணல் அள்ளிக்கொண்டிருந்தது. இது குறித்து கடலாடி வருவாய் ஆய்வாளர் காசிநாதன் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பு சிறப்பு தனிப்படை எஸ்.ஐ.கணேசலிங்க பாண்டியன் மற்றும் போலீஸார் திருட்டு மணல் அள்ளும் இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வருவாய்த்துறையினரிடம் மணல் அள்ளுவதற்கான எந்தவொரு அனுமதியும் பெறாமல் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது தெரியவந்தது. போலீஸார் விசாரணை நடத்தியபோது அனைத்து வாகன ஓட்டுநர்களும் தப்பியோடினர். இதையடுத்து அனைத்து வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்து பரமக்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய ஓட்டுநர்கள் மீது போலீஸார் விசாரித்து வருகின்றனர்.