பரமக்குடியில் செப்டம்பர் 11-ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறிச் சென்ற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 87 வாகனங்களின் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இமானுவேல் சேகரன் நினைவு தினம் செப்டம்பர் 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
செப்டம்பர் 11 ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவிடம் செல்ல வாகனங்களில் வருவோர் உரிய முன்அனுமதி பெறுவதுடன், காவல் துறையினரால் ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில் சென்று வரவேண்டும் எனவும், வாகனங்களில் செல்லும்போது கோஷங்கள் எழுப்பக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சட்ட-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை பின்பற்றாமல், மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டுப்பரமக்குடி வேளாண்துறை அலுவலகம் முன்பு வந்த 87 வாகனங்கள் மற்றும் அதன் ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் பெண் காவலர் சுலோசனா அளித்த புகாரின்பேரில் சார்பு-ஆய்வாளர் ராமசுப்பிரமணியன் 41 வாகனங்களின் மீதும், காவலர் ராஜ்குமார் அளித்த புகாரின்பேரில் ஆய்வாளர் பொன்ராஜ் 20 வாகனங்கள் மீதும், சிறப்பு சார்பு-ஆய்வாளர் ராமையா அளித்த புகாரின்பேரில் சார்பு-ஆய்வாளர் சந்திரசேகர் 26 வாகனங்களின் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.