கடும் வறட்சியின் காரணமாக கமுதி பகுதியில் உள்ள தென்னை மரங்கள் தண்ணீர் இன்றி கருகியுள்ளன. இதனால் தென்னை விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கமுதி அருகே அபிராமம், உடையநாதபுரம், ஏ.பாப்பாங்குளம், பெருநாழி, திம்மநாதபுரம், புதுப்பட்டி, திருச்சிலுவையாபுரம், ராமசாமிபட்டி, நீராவி, கரிசல்குளம், கீழ முடிமன்னார் கோட்டை, மேல முடிமன்னார் கோட்டை, தோப்புநத்தம், பசும்பொன், புதுக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்களை அப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கடந்த சிலஆண்டுகளாக போதிய அளவு பருவ மழை முறையாகப் பெய்யாததால் கமுதி பகுதியில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வறட்சியால் கருகியுள்ளன. இதனால் தென்னை விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இது குறித்து தென்னை விவசாயி மாரிச்சாமி கூறியதாவது: இப்பகுதியில் கடும் வறட்சியின் காரணமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து விவசாயப் பணிகளை செய்யும் அளவிற்கு கூட போதிய அளவு தண்ணீர் இன்றி நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. மேலும் பருவ மழையும் பெய்யாததால் இப்பகுதியில் கூடுதல் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது நன்கு வளர்ந்துள்ள தென்னை மரங்கள் கருகியுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி அரசு தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.