தனுஷ்கோடி கடலில் மூழ்கி மாயமான பொறியியல் கல்லூரி மாணவரின் சடலம் சனிக்கிழமை கரை ஒதுங்கியது.
கீழக்கரை பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களான மணி (20), கரண் (20), அஜித்குமார் (19) மற்றும் விருதுநகர் மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் அஜித் (19) ஆகிய 4 பேரும் தனுஷ்கோடி கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கடலில் எழுந்த ராட்சத அலை 4 பேரையும் இழுத்துச் சென்றது.
இதையடுத்து, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், கடலில் மூழ்கிய 4 பேரில் மூவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும், கடலோரக் காவல் படையினரும், மீனவர்களும் மற்றொரு மாணவரான அஜித்தை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், சனிக்கிழமை காலை தனுஷ்கோடிக்கும், முகுந்தராயர் சத்திரத்துக்கும் இடைப்பட்ட கடற்கரையோரத்தில் அஜித்தின் சடலம் கரை ஒதுங்கியிருந்தது.
இதைக் கண்ட மீனவர்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மண்டபம் கடலோரக் காவல் குழும போலீஸார் மாணவரின் சடலத்தை மீட்டு, ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.