தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை கடற்கரைப் பகுதிகளில் அமைந்துள்ள இயற்கை மணல் குன்றுகளை, சுற்றுச்சூழல் பேராசிரியர்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை கடற்கரைப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் எளிதாக சென்று வரும் வகையில், முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி வரை சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. அரிச்சல் முனையில் சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடலின் அரிப்பைத் தடுக்க கற்சுவரும் அமைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை கடற்கரைப் பகுதிகளில் உள்ள மணல் குன்றுகளையும், மணல் திட்டுகளையும் அதன் தன்மை மாறாமல் பராமரித்திடும் வகையிலும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்து அதனை மேம்படுத்திடவும் சுற்றுச்சூழல் பேராசிரியர்கள் அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். புதுச்சேரி பல்கலைக்கழக சுற்றுச்சூழலியல் துறை பேராசிரியர் தேவி பிரசாத் தலைமையில், பேராசிரியர்கள் பொய்யாமொழி, யோகமூர்த்தி ஆகியோர் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனைப் பகுதிகளில் நேரடி களஆய்வு மேற்கொண்டனர். மணல் குன்றுகள் கடல் அலைகள், கடல் காற்றினால் அழிந்து போய்விடாமல் பாதுகாக்க பனை, யூகலிப்டஸ் உள்ளிட்ட மரக்கன்றுகளை நடவும், படரும் செடி, கொடிகளை வளர்த்திடலாம் எனவும் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்தி, அதன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர். வனத் துறையுடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வையொட்டி, ராமநாதபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் பேபி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராமேசுவரம் வட்டாட்சியர் கணேசன், துணை வட்டாட்சியர் அப்துல்ஜப்பார் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.