திருவாடானை திருத்தேர்வலை அருகே ஆனந்தூர் சாலையில், தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து 2 குழந்தைகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
திருவாடானை அருகே ஆனந்தூரிலுள்ள தனியார் பள்ளி வாகனம், திருத்தேர்வலை கிராமம் சென்று குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக ஒதுங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், கடலூரைச் சேர்ந்த நித்யா (4), விக்னேஷ் (7), வாகன ஓட்டுநர் ஆப்பிராய் கிராமத்தைச் சேர்ந்த அரசவேல் (40) மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த திருத்தேர்வலை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (40) ஆகியோர் காயமடைந்தனர்.
இவர்களுக்கு, ஆனந்தூர் சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தேவகோட்டை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து ஓட்டுநர் அரசவேல் அளித்த புகாரின்பேரில், திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.