சாயல்குடி அருகே திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்த கும்பலைத் தடுக்க முயன்ற தலையாரியை (கிராம உதவியாளரை) தாக்கி கொலை செய்ய முயன்ற 3 பேர் மீது, போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே நரிப்பையூரில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புகார் வந்துள்ளது. அதன்பேரில், மூக்கையூர் கிராம உதவியாளர் கருப்பன் மகன் கோபால், மணல் அள்ளும் இடத்துக்குச் சென்று விசாரித்துள்ளார். அதில், எந்தவித அனுமதியும் இன்றி மணல் அள்ளுவது தெரியவந்துள்ளது. உடனே, அவர்களைத் தடுத்த கிராம உதவியாளரை, அக்கும்பல் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளது. இது குறித்து கிராம உதவியாளர் கோபால் சாயல்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், நரிப்பையூரைச் சேர்ந்த சத்யநாதன்(45), ராமர் (38), அப்துல் வஹாப் (50) ஆகிய 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.