முதுகுளத்தூர் அருகே இரு இடங்களில் கோயில் உண்டியல் பணத்தை திருடிய 3 பேரில், ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோது கிராமத்தின் அருகில் அமைந்துள்ள ஆலமர திண்ணாயிர மூர்த்தி கோயில் உண்டியலை இரவில் மர்ம நபர்கள் உடைத்து, அதிலிருந்த 3,700 ரூபாயை திருடியுள்ளனர்.
பின்னர், இதே நபர்கள் அன்றிரவே மேலச்சிறுபோது ஊருக்குள் அமைந்துள்ள பாண்டி முனீஸ்வரர் கோயில் உண்டியலையும் உடைத்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது, கிராமத்தினர் மர்ம நபர்கள் 3 பேரையும் விரட்டியதில், புளியங்குடி சண்முகவேல் மகன் முத்துராமலிங்கம் (30) என்பவர் மட்டும் சிக்கினார். அவரை, போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் முத்துராமலிங்கத்திடம் விசாரணை நடத்தியதில், மேலக்கன்னிசேரி தில்லைநாதன் மகன் முனியாண்டி, மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் முத்தையா ஆகிய மற்ற இருவரும் தப்பியோடிவிட்டதாகத் தெரிவித்தார். இதன்பேரில், கடலாடி காவல் ஆய்வாளர் முத்துராஜ், 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து, அவர்கள் திருடப் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, கோயில் உண்டியல் பணத்தைக் கைப்பற்றினர்.