ராமநாதபுரம் மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரத்துக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் என்.ஆர்.சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர்.ஜெகராயன், பொருளாளர் ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் கூடுதல் பொறுப்பு வகித்து பணியாற்றி வரும் நிலையில், அதற்குரிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்ட இடமாறுதல் வழங்குவதை உடனடியாக செயல்படுத்தவேண்டும். இணையதள வசதியை அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் செயல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் பேசினர்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் முத்துவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் செல்வன் சிறப்புரையாற்றினார்.
போராட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த நகர, வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.