திருவாடானை அருகே கருப்பூர் கிராமகத்தில் இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் கிராமத்தின் குடிநீர் ஆதாரமான ஊருணியை சுத்தம் செய்து கிணறு அமைத்தனர்.
திருவாடானை தாலுகா ஆதியூர் பஞ்சாயத்து கருப்பூர் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஆண்டும், நடப்பு ஆண்டும் பருவ மழை பொய்த்து விட்டதால் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு பலமுறை புகார் தெரிவித்தும்எந்தவித நடவடிக்கையும் இல்லையாம்.
இதனால் இப்பகுதி இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிராமத்தில் இருந்த தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க களமிறங்கினர். இதையடுத்து கிராம மக்களின் துணையோடு கிராமத்தில் உள்ள கலப்பா ஊருணியில் இருந்த சீமை கருவேல மரங்களை அகற்றி அதில் ஒரு கிணறும் தோண்டினர்.
தற்போது கிணற்றில் நல்ல குடிநீர் கிடைக்கிறது. அதனை இப்பகுதி மக்கள் பயண் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கிணறை பாதுகாக்கும் வகையில் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.