இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் 2 -ஆவது நாளாக புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கடந்த நான்கு மாதங்களில் ராமேசுவரம், புதுக்கோட்டை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 125 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு வழசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 178 விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த படகுகள் மற்றும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் புதன்கிழமை 2 ஆவது நாளாகத் தொடர்ந்தது.
வேலை நிறுத்தம் காரணமாக ராமேசுவரம் துறைமுகத்தில் 850- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 8 ஆயிரம் மீனவர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் ரூ. 2 கோடி அளவிலான ஏற்றுமதி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மீனவ சங்கத்தலைவர் தேவதாஸ் கூறியது:
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி 6 மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறோம்.
வரும் 16 ஆம் தேதி பாம்பன் பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அப்போதும் மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக மீனவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் தெரிவித்தார்.