புதுதில்லியைச் சேர்ந்த நிறுவனம் பாம்பனில் தங்கும் குடில்கள் அமைக்க வாங்கிய 51 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்திருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட நில மோசடி தடுப்புப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுதில்லி உதய்பார்க் பகுதியை சேர்ந்த கரன்வீர் கோத்தாரியின் மகன் மனீஸ் கோத்தாரி(50). புதுதில்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இயக்குநராகப் பணியாற்றி வரும் இவர் தனது தொழிலை அபிவிருத்தி செய்ய சென்னை பாலாஜி நகரில் வசித்து வந்த சோமசுந்தரம் மகன் முத்துராமலிங்கம் என்பவர் மூலமாக ராமேசுவரம் அருகே பாம்பனில் தங்கும் குடில்கள் அமைக்க திட்டமிட்டார். இதன்படி பாம்பனில் 51.43 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.
இந்த நிலத்தை வாங்க முத்துராமலிங்கத்துக்கு மனீஸ்கோத்தாரி அங்கீகாரம் வழங்கியிருந்தாராம். இந்நிலையில் மனீஸ்கோத்தாரிக்கு தெரியாமல் தனது அங்கீகாரத்தை தவறாகப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயாரித்து அந்தச் சொத்தை பிறருக்கு முத்துராமலிங்கம் விற்பனை செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முத்துராமலிங்கத்தின் மகன் விக்ரம், சென்னை பெரியார் நகரை சேர்ந்த வரூப் சந்திரன் மகன் பிரேம்ஸ் வரூப், ராமநாதபுரம் அருகே தெற்குகாட்டூர் பகுதியை சேர்ந்த ஜி.முனியசாமியின் மகன் சுதர்சன்பாபு உள்ளிட்ட பலரும் உடந்தையாக இருந்ததுடன் சாட்சிக் கையெழுத்தும் இட்டுள்ளனராம்.
இது தெரியவந்ததும் ராமநாதபுரம் மாவட்ட நிலமோசடி தடுப்புப்பிரிவுக் காவல் நிலையத்தில் மனீஸ் கோத்தாரி புகார் அளித்தார். அதன்பேரில் ஆய்வாளர் களஞ்சியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.