ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழே சாய்ந்து விழும் நிலையில் உள்ள மினகம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்டலமாணிக்கம் அடுத்துள்ள ம.புதுக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் அருகே 3-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்து கீழே சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளன. மேலும் அவற்றில் இருந்து தாழ்வாக செல்லும் மின்வயர்களில் இருந்து மின் கசிவு ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. அத்துடன் வீசும் காற்றில் மின்வயர்கள் வீடுகளின் மேற்கூரைகள் மற்றும் சுவர்களில் உரசுவதால், அங்கு வசிப்பவர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே விபத்து ஏற்படும் முன், சேதமடைந்த இந்த மின்கம்பங்களையும், தாழ்வாக செல்லும் மின்வயர்களையும் சீரமைக்க கமுதி மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம. புதுக்குளம் கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.