பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட காட்டுப்பரமக்குடி பகுதியில் சனிக்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்த வேளாண் துறை பெண் ஊழியரின் 3 பவுன் சங்கிலியை, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றுவிட்டனர்.
பரமக்குடி மணிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவர் மனைவி சிவராணி (48). இவர், வேளாண் துறையில் பணியாற்றி வருகிறார். சம்பவ நாளன்று பணி முடிந்து காட்டுப் பரமக்குடி பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர், சிவராணி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துள்ளனர். ஆனால், சிவராணி நகையை இறுகப் பற்றிக் கொண்டதால், 8 பவுன் சங்கிலியில் 3 பவுனை மட்டும் பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பிவிட்டனர்.
இது குறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் சிவராணி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.