ராமநாதபுரம் அருகே கிராமத்தில்இருந்து தனது குடும்பத்தை ஒதுக்கி வைத்து விட்டதாக ஆட்சியரிடம் பெண் திங்கள்கிழமை புகார் தெரிவித்தார்.
அலைகாத்த வலசை கிராமத்தைச் சேர்ந்த அருள்மொழி அந்த மனுவில் தெரிவித்திருப்பது: எனது குழந்தைகள் இருவரும் பிற குழந்தைகளுடன் விளையாடும் போது தகராறு ஏற்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட குழந்தைகளை கண்டித்து வளர்க்க அறிவுரை கூற பெற்றோர்களிடம் வலியுறுத்துமாறு உச்சிப்புளி காவல் நிலையத்தில் புகார் செய்தேன்.
இதற்கு கிராமத்தில் உள்ள தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் நாங்கள் இருக்கும் போது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாமா எனக் கேட்டனர். இதன் காரணமாக கிராமத்து நிர்வாகம் எனது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளது.
மீண்டும் ஊரில் சேர்த்துக் கொள்வது என்றால் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்துமாறு கிராமத்து நிர்வாகம் கூறுகிறது. எனவே எங்களை மீண்டும் கிராமத்தில் சேர்த்துக் கொள்ள ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.