ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கலையூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற ஆசிரியை பா.நிர்மலாதேவியை அக்கிராம மக்கள் திங்கள்கிழமை பாராட்டி கெளரவித்தனர்.
பரமக்குடியைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியை பா.நிர்மலாதேவி கலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது ஆலோசனையின் பேரில் இப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் அருண்பிரகாஷ் கண்டுபிடித்த மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் தலைக்கவசம் அகில இந்திய அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பிடித்துள்ளது.
இம்மாணவர் சர்வதேச அளவில் கலாசாரப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
மேலும் ஆசிரியர்களுக்கிடையேயான அறிவியல் கண்காட்சியில் ஆசிரியை நிர்மலாதேவியின் படைப்பு மாநில அளவில் முதலிடம் பிடித்து சான்றுகள் பெற்றுள்ளன.
பின்தங்கிய கிராமப்புறத்தில் பணியாற்றி பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய ஆசிரியை நிர்மலாதேவி என்ற வகையில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட 38 ஆசிரியர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இவரது பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஏ.ஏ.ஏ. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கனவு ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கனவு ஆசிரியருக்கான பாராட்டு சான்றிதழும், ரூ 10 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கி பாராட்டியுள்ளார்.
விருதுபெற்ற ஆசிரியரை அக்கிராம பொதுமக்கள் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பாராட்டி கெளரவித்தனர்.