பரமக்குடியில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன்கள் 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
பரமக்குடி எஸ்.எஸ்.கோவில் தெருவைச் சேர்ந்த ராமாச்சாரி என்பவர் நெசவுத்தொழில் செய்து வருகிறார். இவருக்கு காந்திலால்(53), ரமேஷ்(51), சுந்தர்ராஜன்(48) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் ரமேஷ் எமனேசுவரம் ஆதிநாராயணன் கோவில் தெருவிலும், சுந்தர்ராஜன் வேதாந்தமடத் தெருவிலும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது.
இதில் ஏற்பட்ட தகராறில் தன்னை ரமேசும், காந்திலாலும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கியதாக சுந்தர்ராஜன் அளித்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து ரமேஷ், காந்திலால் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கணவர் கைது :எமனேசுவரம் காந்திகர் பகுதியைச் சேர்ந்தவர் சாத்தன் மகன் நாகராஜன்(48). இவருக்கும், அவரது மனைவி ஹேமலதாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் நாகராஜன் கை மற்றும் கம்புகளால் ஹேமலதாவைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் பலத்த காயமடைந்த ஹேமலதா பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து எமனேசுவரம் காவல் நிலையத்தில் ஹேமலதா அளித்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் முருகனாதன் வழக்குப் பதிந்து நாகராஜனை திங்கள் கிழமை கைது செய்தார்.