முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக் கூடாது, மீறினால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி திங்கள்கிழமை அப்பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் பொருள்கள் வழங்கப்படுகிறதா எனச் சோதனை செய்தார். மேலும் செயல் அலுவலர் உத்தரவின் பேரில் அதிகாரி செல்வக்குமார் தலைமையில் பஜாரில் உள்ள கடைகளில் ஊழியர்கள் ஆய்வு மேற்க்கொண்டனர்.
ஆய்வில் பல்வேறு கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பைகள் வழங்கப்படமாட்டாது, துணிப்பை கொண்டு வரவும் என்ற அறிவிப்பை அனைத்து கடைகளிலும் பேரூராட்சி ஊழியர்கள் ஒட்டினர்.
இது குறித்து செயல் அலுவலர் இளவரசி கூறுகையில், கடை உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பைகளில் நுகர்வோர்களுக்கு பொருள்கள் வழங்கக் கூடாது. மீறினால் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.