ராமநாதபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் விஷம் குடித்து இருவரும், விஷம் கலந்த உணவுப் பொருளை தவறுதலாகச் சாப்பிட்டு ஒருவரும் என 2 பெண்கள் உள்பட 3 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரைச்சாலைப் பகுதியில் மாடக்கொட்டான் கிராமத்தைச் சேர்ந்த நா.கலையரசன் மகள் பொன்.நீலவேணி(23). இவர் தான் விரும்பிய பாடத்தை மேற்படிப்பாக எடுத்துப் படிக்க முடியவில்லையே என்ற விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாராம்.
இந்த சம்பவம் தொடர்பாக நா.கலையரசன் கொடுத்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மற்றொரு சம்பவம்: ராமநாதபுரம் அருகே பெரியபட்டிணம் முகம்மது ஹனிபாவின் மகள் அர்ஷிதாபானு(17). இவர் வீட்டில் எலி பிடிப்பதற்காக போண்டாவில் விஷம் கலந்து வைத்திருந்ததை தெரியாமல் அதை எடுத்து சாப்பிட்டு விட்டாராம். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக திருப்புல்லாணி காவல் சார்பு ஆய்வாளர் உல.ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் பெருமாள் மகன் கோபாலகிருஷ்ணன்(48). சுற்றுலாப் பயணியாக வந்த இவர், பாம்பன் பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி அருகில் பழரசத்தில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்து கிடந்துள்ளார்.
இறந்த பிறகு தன்னை நல்ல முறையில் அடக்கம் செய்யுமாறு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக கோபாலகிருஷ்ணனின் மனைவி சுமதி(34) கொடுத்த புகாரின் பேரில் பாம்பன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.