சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை உயிர் சேதம் ஏற்படும் முன், அகற்றிவிட்டு, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நரிப்பையூரில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டமேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடனேயே கிராம மக்கள் குடிநீர் பிடிக்க சென்று வருகின்றனர்.
எனவே, உயிர் சேதம் ஏற்படும் முன்னர், இதனை மராமத்து செய்ய வேண்டும் அல்லது முழுவதுமாக அகற்றிவிட்டு, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கட்ட வேண்டும் என கிராம மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இனியாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நரிப்பையூர் கிராம மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.