கமுதி அருகே அரசுப் பள்ளி முன் மாதக்கணக்கில் தேங்கியுள்ள கழிவு நீரால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கமுதி அருகே கிளாமரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 25-க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கிளாமரத்தில் கழிவுநீர், மழைநீர் செல்ல போதிய வாய்க்கால் வசதி இல்லாததால், மழைநீரோடு சேர்ந்து கழிவு நீர் வெளியேற முடியாமல் பள்ளி வகுப்பறைகளுக்கு முன் மாதக்கணக்கில் தேங்கியுள்ளது. இதனால் கொசுத்தொல்லை, துர்நாற்றத்தால் மாணவர்கள் பாதிக்கபட்டுள்ளனர். பள்ளி எதிரே கழிவுநீர் தேங்கியுள்ள பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பள்ளி மாணவர்களின் நலன் கருதி வகுப்பறைகளுக்கு எதிரே தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, தாழ்வாகச் செல்லும் மின்வயர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.