பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி பேருந்து நிறுத்தத்தில், போலீஸ்காரரை வழிமறித்து தாக்கிய மர்ம நபர்கள் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராகப் பணியாற்றி வருபவர் வேம்பையா (42). இவர், சம்பவத்தன்று மாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் கமுதக்குடி சென்றுள்ளார். அப்போது, கமுதக்குடி பேருந்து நிறுத்தத்தில் 3 மர்ம நபர்கள் நின்றுகொண்டு வேம்பையாவை வழிமறித்துள்ளனர். அவரும் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பிகளைக்கொண்டு அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும், அந்த மர்ம நபர்கள் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர், பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் வேம்பையா அளித்த புகாரின்பேரில், சார்பு-ஆய்வாளர் சண்முகநாதன் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்.