ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து சட்ட விழிப்புணர்வுப் பிரசார வாகனத்தை, மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. கயல்விழி வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆண்டுதோறும் நவம்பர் 9 ஆம் தேதி, தேசிய சட்டப்பணிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சார்பில், நவம்பர் 9 ஆம் தேதியிலிருந்து 13 ஆம் தேதி வரை 5 நாள்கள் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசார வாகனம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வாகனத்தை, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. கயல்விழி கொடியசைத்து தொடங்கி வைத்துப் பேசினார்.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், சார்பு நீதிபதியுமான வ. ராமலிங்கம், சார்பு நீதிபதி எம். பிரீத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், நீதிபதிகள் ஜி. இசக்கியப்பன், ஆர். ராதாகிருஷ்ணன், வழக்குரைஞர் சங்க செயலர் ஏ.ஆர். நம்புநாயகம் மற்றும் நீதிமன்றப் பணியாளர்கள், வழக்குரைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.