ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் அருகே மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிய கணவரை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பார்த்திபனூர் காவல் சரகத்துக்குள்பட்ட மேலப்பெருங்கரை காலனியை சேர்ந்தவர் சிட்டு மகன் கணேசன் (61). இவர் தனது மனைவி பாலம்மாளுடன் (35) அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை தனது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசித் திட்டிய கணேசனை, பாலம்மாள் உறவினர் கோட்டையன் மனைவி அழகம்மாள் (61) கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், தனது மனைவி மற்றும் அழகம்மாளை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த இருவரும், பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பார்த்திபனூர் காவல் நிலையத்தில் பாலம்மாள் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து கணேசனை கைது செய்தனர்.