"கஜா' புயல் காற்றால், முதுகுளத்தூர் அருகே வியாழக்கிழமை இரவு ஓட்டு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கையில் வியாழக்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில், அக்கிராமத்தைச் சேர்ந்த மலைப்பாண்டி என்பவரது ஓட்டு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. கூரையும் இடிந்து விழுந்ததால், வீடு முற்றிலும் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக மலைப்பாண்டியன் தனது குடும்பத்தினருடன் முன்னெச்சரிக்கையாக அருகிலுள்ள வீட்டில் தங்கியதால், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
தகவலறிந்த முதுகுளத்தூர் வட்டாட்சியர் மீனாட்சி, வருவாய் ஆய்வாளர் பத்மா மற்றும் வருவாய் அலுவலர்கள், சம்பவ இடத்துக்குச் சென்று சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
மேலும், முதுகுளத்தூர் அருகே உடைகுளம், கீழகன்னிசேரி ஆகிய கிராமங்களில் சூறாவளியினால் 5-க்கும் மேற்பட்ட புளியமரங்கள் வேறோடு சாய்ந்து விட்டன.
முதுகுளத்தூர் வட்டாட்சியர் மீனாட்சி தெரிவிக்கையில், கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த பதினெட்டாம்படியன் (92) என்பவர் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இறந்ததாக தகவல் வந்தது. விசாரணை செய்ததில், அவர் இயற்கை மரணம் அடைந்ததாக கிராமத்தினர் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் மற்றும் பரமக்குடி சார்-ஆட்சியர் விஷ்ணுசந்திரன் ஆகியோரிடம் தகவல் தெரிவித்துள்ளதாக வட்டாட்சியர் கூறினார்.