ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் வெள்ளிக்கிழமை அதிமுக பிரமுகரை அரிவாளால் வெட்டி விட்டு மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.
சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.பி. பாண்டியன். அதிமுக பிரமுகர். இவர் சாயல்குடி பிரதான கடைத் தெருவில் இருசக்கர வாகன விற்பனை ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலையில் கடையில் இருந்த பாண்டியனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சாயல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சாயல்குடி காவல் ஆய்வாளர் ஜோக்கிம் ஜெரி தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர்.