திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என முதுகுளத்தூரில் நடைபெற்ற ஆள்சேர்ப்பு முகாமில் தெரிவிக்கப்பட்டது.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான ஆள் சேர்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆணையாளர் கணேஷ் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் சாவித்ரி, இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் முத்துமருது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் பயிற்சி நிர்வாகி குமாரசாமி கூறியது: 33-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களில் திறன் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. 5 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை நிலைக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பும், பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு போக்குவரத்து நிதி உதவியாக நாள் ஒன்றுக்கு ரூ.100 ம் வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேர்வதற்கான தகவல் மற்றும் விண்ணப்பங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் அருகில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையங்களையும் தொடர்பு கொள்ளலாம்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பெண்களுக்கு மட்டும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் பெண்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம் என்றார். இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் சுந்தரலிங்கம் நன்றி கூறினார்.