கமுதி அருகே வரத்து கால்வாய் பாலம் சேதமடைந்துள்ளதால் மழைநீர் கண்மாய்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அதை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கமுதி அருகே பாக்குவெட்டி பாலத்திலிருந்து ஆனையூர் விலக்கு சாலை வழியாக கிடாத்திருக்கை, கொண்டுலாவி, இலந்தைகுளம், கள்ளிக்குளம் ஆகிய கிராமங்களுக்கு சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலம் வழியாக மழை நீர் செல்லும் மலட்டாறு வரத்து கால்வாய் பல ஆண்டுகளாக மராமத்து செய்யப்படாமல் தூர்ந்து, சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதர்மண்டி, காடு போல் காட்சியளிக்கிறது.
இதனால் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மலட்டாறு வரத்து கால்வாய் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த பாலத்தின் கட்டுமானம் இடிந்து விழுந்தால் விபத்து ஏற்படுவதோடு, போக்குவரத்து பாதிக்கப்பட்டு மழை காலங்களில் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்படும்.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சேதமடைந்து இடிந்து விழும் வரத்து கால்வாய் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.