ராமேசுவரம் மீனவர்களை  இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பு

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதுடன், வலைகளை அறுத்தெறிந்து

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதுடன், வலைகளை அறுத்தெறிந்து விரட்டியடித்ததாக, செவ்வாய்க்கிழமை கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். 
      டீசல் விலை உயர்வு, மானியத்தை உயர்த்தி வழங்கவேண்டும், இலங்கையில் சேதமடைந்துள்ள விசைப் படகுகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடந்த 3 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    தொடர்ந்து 12 நாள்கள் நடைபெற்ற இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய-மாநில அரசுகள் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், தீபாவளி உள்ளிட்ட திருவிழாக்கள் வருவதையொட்டியும், வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டும் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். 
     இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை 400-க்கும் அதிகமான விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குச் சென்றனர்.
  இவர்கள், செவ்வாய்க்கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் 7 ரோந்து கப்பலில் வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 
மேலும், 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகளை அறுத்தெறிந்து, மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.     உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பல ஆயிரம் ரூபாய் நஷ்டத்துடன் செவ்வாய்க்கிழமை கரை திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com