ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் போலீஸார் தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்ததால் போலீஸாரை கண்டித்து ஆட்டோ சங்கத்தினர், பொது மக்கள் ஆகியோர் போலீஸாரை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.
கமுதி அருகே வில்லனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு (36). இவர் சாயல்குடியில் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து நிலையம் அருகே பயணிகளை இறக்கி விட்டுள்ளார். அப்போது சாயல்குடி காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் விஜயபாஸ்கர், சாரதா ஆகியோர் அங்கு வந்து "நோ பார்கிங்' பகுதியில் ஆட்டோவை நிறுத்தியதாக அழகுவை கண்டித்துள்ளனர். இதில் அவருக்கும் காவல் துறை ஆய்வாளர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆட்டோவின் முன் மற்றும் பின் பக்க கண்ணாடிகளை உடைத்து, ஆட்டோ ஓட்டுநர் அழகுவை போலீஸார் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் அழகு கையில் காயமடைந்தார். இதையடுத்து அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ஆட்டோ சங்கத்தினர் மற்றும் அப்பகுதி பொது மக்கள் பேருந்து நிலையம் அருகில் சார்பு ஆய்வாளர்கள் விஜயபாஸ்கர், சாரதா இருவரையும் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.