கமுதி அருகே சூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆழ்துளை கிணறு மோட்டாரை இயக்கி, விவசாயப் பணி நடைபெற்று வருகிறது.
கமுதி பகுதியில் 8 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், விவசாய நிலங்கள் தரிசுகளாக மாறியுள்ளன. அவற்றில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை வெட்டி, கரிமூட்டம் செய்யும் தொழிலுக்கு விவசாயிகள் மாறியுள்ளனர். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கமுதி அருகே உள்ள பசும்பொன்னைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், "விவசாய மேம்பாட்டுத் திட்டத்தில், தனது 4 ஏக்கர் நிலத்தில் ரூ. 5 லட்சம் (80 சதவீதம் அரசு மானியம்) மதிப்பீட்டில், சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் ஆழ்துளை கிணறு வசதியை ஏற்படுத்தினார். இதன்மூலம் நிலத்தில் தண்ணீரை பாய்ச்சி, "ஏர்மாடு' உழவு செய்து, நெல் சாகுபடி செய்யவுள்ளார்.
இதுகுறித்து விவசாயி ராஜேந்திரன் கூறியதாவது:
விவசாயிகளுக்கு அரசு பல்வேறு திட்டங்களில் நூறு சதவீதம் வரை மானியம் வழங்கி, விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில், அரசு மானியத்துடன் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் இணைப்புக்காக மின்வாரியத்தில் விண்ணப்பித்து காத்திருக்காமல், வேளாண் துறையின் மானியத்தை பெற்று, சூரிய ஒளி மின்சாரத்தில் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.