ராமேசுவரம், செப். 11: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் நாட்டுப் படகுகளை கணக்கெடுத்து, ஆய்வு செய்யும் பணியை வெளி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
ராமேசுவரம் தீவுப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடந்த ஜூன் மாதத்தில் விசைப்படகுகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுப் படகுகள் ஆய்வு செய்யும் பணியை, வெளி மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் யுவராஜ் தலைமையில் 15 பேர் கொண்ட மீன்வளத்துறை குழுவினர் செவ்வாய்க்கிழமை தொடங்கினர். இதில் நாட்டுப்படகின் நீளம், அகலம், உயரம், இயந்திரம் பொருத்தப்பட்ட படகா அல்லது இயந்திரம் பொருத்தப்படாமல் உள்ள படகா, மரப்படகு மற்றும் பிளாஸ்டிக் படகுகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆவணங்கள் படகின் உரிமையாளர்கள் பெயரில் உள்ளதா? அல்லது வேறு நபர்கள் பெயரில் உள்ளனவா என ஆய்வு செய்தனர். வேறு நபர்கள் பெயரில் இருந்தால் உடனே மாற்றிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வு மேற்கொண்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.