பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் துருப்பிடிக்காமல் தடுக்க பெயிண்ட் அடிப்பதை 2 ஆண்டுகளாக நிறுத்தியதால் அதன் உறுதி தன்மை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் ரயில் பாலத்தில் கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் தூக்குப்பாலம் இடம்பெற்றுள்ளது. இந்த பாலத்தில் துரு பிடிப்பதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் ரசாயனம் கலந்த அலுமினிய பெயிண்ட் அடிக்கப்படுவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தூக்குப் பாலத்தில் பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெறவில்லை. இதனால் தூக்குப் பாலத்தில் பல்வேறு இடங்களில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து வருகிறது. பாலத்தை மாற்றி அமைக்க ஆய்வுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தாலும் நாள் தோறும் ரயிலில் வரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி படுத்தும் விதமாக தூக்குப்பாலத்தை துரு பிடிப்பதில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வர்கள் மற்றும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.