ராமநாதபுரத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற சைக்கிள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அண்ணாவின் பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் தொடங்கிய சைக்கிள் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 13 வயது, 15 வயது, 17 வயதுக்கு உள்பட்டோர் என 3 பிரிவுகளாக இரு பாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.
இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்க் பால் ஜெயசீலன், மாவட்ட விரைவு மிதிவண்டிக் கழகத் தலைவர் ஆர்.பிரபாகரன், செயலாளர் ஆர்.ஜான்சன் கலைச்செல்வன், பொருளாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.