பரமக்குடி ஆயிரவைசிய சமூகநலச் சங்கத்தில் வ.உ.சி. யின் 147-ஆவது பிறந்தநாளையொட்டி அனைத்து வெள்ளாளர் மகா சபை மற்றும் சங்கரா கண் மருத்துவமனை, ராமநாதபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் சனிக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இம்முகாமுக்கு சபையின் செயலர் வி.முனியாண்டி தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் எம்.எஸ்.ராதாகிருஷ்ணன், எம்.கோவிந்தராஜன், பூமிநாதன், வின்சென்ட்ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் நாக ஆஞ்சநேயர் தலைமையில் இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளில் 30 பேர் கண் குறைபாடு கண்டறியப்பட்டு அவர்களுக்கு இலவச கண்புறை அறுவைச் சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
முன்னதாக சபையின் செயல்தலைவர் டி.கார்த்திகேயன் வரவேற்றார். முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் எஸ்.அய்யப்பன் செய்திருந்தார். கண் மருத்துவ உதவியாளர் பொ.முருகன் நன்றி கூறினார்.