முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை தேசிய ஊட்டச்சத்து வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை அப்பள்ளித் தலைமையாசிரியர் உமாமகேஸ்வரி கொடியசைத்து துவக்கி வைத்து, ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்து எடுத்துக்கூறினார். பள்ளியில் துவங்கி பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, செல்வி அம்மன் கோவில் தெரு வழியாக பதாகைகளுடனும், விழிப்புணர்வு கோஷத்துடனும் மாணவர்கள் வந்தனர். நகரில் உள்ள கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தை வைத்திருக்கும் தாய்மார்கள் வீடுகளுக்கு சென்று ஊட்டச்சத்து உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் முத்துராமலிங்கம்,சிவகுமார், சரவணன், திலகவதி மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.