கமுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கமுதி அருகே செங்கப்படையில் தனியார் சூரியஒளி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 648 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கபட்டு, ராமநாதபுரம் மாவட்டம் மின்மிகை மாவட்டமாக உள்ளது. இருந்த போதிலும் சில நாள்களாக இப்பகுதியில், அதிகாலை முதல் இரவு வரை தினமும் 8 மணி நேரம் அறிவிக்கபடாத மின்வெட்டு அமல்படுத்தபடுகிறது. இதனால் காலாண்டு தேர்வெழுதி வரும் மாணவர்கள் இரவு நேரங்களில் தேர்வுக்கு படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த முனியசாமி செவ்வாய்க்கிழமை கூறியது: மாவட்ட நிர்வாகம் மாணவர்களின் நலன் கருதி சீராக மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து கமுதி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியது: மின்கம்பங்கள், மின் வழித்தடங்களில் உள்ள கருவேல மரங்கள் உடைந்து மின்கம்பிகளில் விழுந்து விடுகிறது. இந்த சேதங்களை சீரமைப்பதால், சிலமணிநேரம் மின்வெட்டு தவிர்க்க முடியாமல் அமல்படுத்தப்படுகிறது என்றார்.