மங்களம் கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம்
கடலாடி அருகே மங்களம் கிராமத்திலுள்ள கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கிராமத்தில் அமைந்துள்ள ஆதிசோமாஸ்வரர், ரேணுகாம்பாள், செல்லியம்மன் ஆகிய கோயில்களில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. இதனையொட்டி, இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்தயம் நடத்தப்பட்டது.
பெரிய மாட்டு வண்டி போட்டியில் 12 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இவற்றுக்கு, மங்களத்திலிருந்து தேவர்குறிச்சி வரை 10.கி.மீ. தொலைவு இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், திருநெல்வேலி மாவட்டம் கடம்பூர் ஜமீன்தார் மாடு முதல் பரிசும், சிவகங்கை மாவட்டம் அதிகரைச் சேர்ந்த மாடு இரண்டாவது பரிசும், திருநெல்வேலி மாவட்டம் மருதால்குறிச்சி மாடு மூன்றாவது பரிசும் வென்றன.
இதேபோல், சின்ன மாட்டு வண்டிப் பந்தயத்தில் 16 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. மங்களம் முதல் ஆப்பனூர் வரை 8 கி.மீ. தொலைவு இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், மருதால்குறிச்சி மாடு முதல் பரிசும், தூத்துக்குடி மாவட்டம் கம்பத்துப்பட்டி மாடு இரண்டாவது பரிசும், சாயல்குடி காடமங்களம் மாடு மூன்றாவது பரிசும் பெற்றன.
போட்டியில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு குத்துவிளக்கு, ஊக்கத் தொகையும் மற்றும் மாட்டு வண்டி சாரதிகளுக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.