சிவகங்கை அருகே புதிதாக திறக்கப்பட்ட அரசு மதுபானக் கடையை மூட வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மதுபானக் கடைகளை உச்ச
நீதிமன்ற உத்தரவை அடுத்து மூடப்பட்டன. இந்நிலையில், சிவகங்கை அருகே உள்ள ரோஸ் நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை புதிதாக 2 மதுபானக் கடைகள் திறப்பதற்கு முயற்சிக்கப்பட்டன. இதையறிந்த அப்பகுதி மக்கள், மதுபானக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும், சிவகங்கை காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன், தாலுகா காவல் நிலையத்தின் சார்பு-ஆய்வாளர் பூமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பகுதியில் புதிதாக மதுபானக் கடை திறக்கப்படாது என உறுதியளித்ததை அடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.