ஆக.16 முதல் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்
ஊதிய உயர்வு கோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வரும் 16 -ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக மானாமதுரையில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலர் எஸ்.செல்வன் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட கமலேஷ்சந்திரா கமிட்டி தனது அறிக்கையை கடந்த 24.11.2016-இல் மத்திய அரசிடம் அளித்து விட்டது. இந்த அறிக்கையில் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது சம்மந்தமான அம்சங்கள் உள்ளன. ஆனால் மத்திய அரசு இந்த அறிக்கையின்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுத்து வருகிறது.
சங்கத்தின் மத்தியக்குழு நிர்வாகிகள் பலகட்டங்களாக மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து சங்கத்தின் மத்தியக்குழு முடிவின்படி ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டிருந்த கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தொடங்கவுள்ளது.
கமலேஷ்சந்திரா கமிட்டி அறிக்கையை அமல்படுத்தக்கோரி நடைபெறும் இந்தப் போராட்டத்தில் தமிழகத்தில் 15 ஆயிரம் ஊழியர்களும் சிவகங்கை மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் பங்கேற்கிறார்கள்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் நகர் பகுதி மற்றும் கிராமங்களில் அஞ்சல்துறையின் தபால் பட்டுவாடா உள்ளிட்ட அஞ்சல்துறை தொடர்பான பல பணிகள் பாதிக்கப்படும் என்றார்.