சிவகங்கை மாவட்டத்தில் வட்ட அளவிலான பொது விநியோகத்திட்ட நுகர்வோர் குறை தீர் கூட்டங்கள் ஆக.12-இல் (சனிக்கிழமை) நடைபெற உள்ளன.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளது: பொது விநியோகத் திட்டத்தில் சிவகங்கை மாவட்ட பொதுமக்களுக்கு ஏற்படும் குறைகளுக்கு நேரடியாக தீர்வு காணும் பொருட்டு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி அந்தந்த வட்டத்திற்குள்பட்ட கிராமங்களில் நடைபெற உள்ளன. இக்கூட்டங்களில் துணை ஆட்சியர் நிலையிலான மண்டல அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஆகவே இந்த கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு பொது விநியோகத் திட்டம் தொடர்பான தங்களது குறைகளைத் தெரிவித்து உடனடியாக தீர்வு காணலாம். நுகர்வோர் கூட்டம் நடைபெறும் கிராமங்கள்:சிவகங்கை வட்டம் அலவாக்கோட்டை,காரைக்குடி வட்டம் எஸ.ஆர்.பட்டிணம்,திருப்புவனம் வட்டம் லாடனேந்தல்,திருப்பத்தூர் வட்டம் விராமதி,மானாமதுரை வட்டம் செய்களத்தூர், தேவகோட்டை வட்டம் எழுவன்கோட்டை,சிங்கம்புணரி வட்டம் அரளிப்பட்டி, காளையார்கோயில் வட்டம் ஆண்டுரணி,இளையான்குடி வட்டம் பெரும்பச்சேரி என குறிப்பிடப்பட்டுள்ளது.