கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கரியமல்லம்மாள் கோயில் விழாவில் பக்தர்கள் சாக்கு வேடம் அணிந்து வினோதமான முறையில் நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.
ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு இக்கோயிலில் பொங்கல் விழா கடந்த 4-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. திருவிழாவில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் 1008 திருவிளக்கு பூஜை, பொங்கல் வைத்து வழிபாடு ஆகியவை நடைபெற்றன.
இத்திருவிழாவின் கடைசி நாளான சனிக்கிழமை பக்தர்கள் கேரள செண்டை மேளம் முழங்க சாக்கு வேடம் அணிந்து வினோதமான முறையில் கைகளில் வேப்பிலைகளை வைத்து ஆடியவாறு வந்து தங்களது நேத்திகடன்களை நிறைவேற்றினர். மேலும் அக்கினி சட்டி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும்
நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபட்டனர். கமுதி பகுதியில் வினோதமாக நடைபெறும் இத்திருவிழாவை கமுதி மற்றும் கமுதியை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பார்வையிட்டனர்.