சிவகங்கை மாவட்டத்தில் தொடர் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 பேரை, போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்த 35 பவுன் நகைகளை மீட்டுள்ளனர்.
சிவகங்கை அருகே உள்ள பூவாளி மற்றும் கொழுக்கட்டைபட்டி ஆகிய கிராமங்களில் கடந்த சில வாரங்களாக பூட்டியிருந்த வீடுகளில் மர்ம நபர்கள் நுழைந்து பொருள்களைத் திருடிச் சென்றதாகப் புகார்கள் அதிகளவில் எழுந்தன.
இதையடுத்து, சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி. ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன், சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன்ஆகியோர் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரனையில் ஈடுபட்டனர்.
அதில், மதுரை மாவட்டம் அனஞ்சியூரைச் சேர்ந்த
ஞானவல்லரசு என்ற வல்லரசு (19), பரமக்குடியைச் சேர்ந்த முருகேசன் என்ற முருகசாமி (42), காரைக்குடியைச் சேர்ந்த சரவணன் (30), விருதுநகர் மாவட்டம் அத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த முனியராஜ் (27) ஆகிய 4 பேரும், மேற்கண்ட கிராமங்களில்
நடைபெற்ற திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.
இதுதவிர, காரைக்குடி, இளையான்குடி, தேவகோட்டை, காளையார்கோவில், சாலைக்கிராமம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற வழிப்பறி சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதையடுத்து, ஞானவல்லரசு, முருகசாமி, சரவணன், முனியராஜ் ஆகிய 4 பேரையும், சிவகங்கை தாலுகா போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்த 35 பவுன் நகைகளை கைப்பற்றினர்.