சிவகங்கை மாவட்டத்தில் படைவீரர் கொடி நாள் நிதி வசூலை, ஆட்சியர் க. லதா வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
முப்படை வீரர்களின் அளப்பரிய சேவையை நினைவு கூரும் வகையில், முப்படையினர் கொடி நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 7ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இந்த தினத்தை முன்னிட்டு வசூலிக்கப்படும் நிதி முழுவதும் முன்னாள் படைவீரர்கள், ஊனமுற்ற படை வீரர்கள், போரின் போது இறந்த வீரரின் மனைவி மற்றும் அவரது குடும்பத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொருத்தவரை, இந்தத் திட்டம் தமிழ்நாடு அரசு முன்னாள் படை வீரர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் க. லதாவுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கொடி அணிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கொடி நாள் நிதி வசூலை ஆட்சியர் க. லதா வழங்கி தொடக்கி வைத்தார்.
இதில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் து. இளங்கோ, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் என். சுந்தரமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)பெனடிக்ட் தர்மராய் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.