முப்படைகளில் சேர்ந்து பணியாற்றி வரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் தொகுப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் சி.செல்வமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராணுவப் பணியில் சேரும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளை ஊக்குவிக்கும் பொருட்டும், பயிற்சிக் காலத்தின் போது ஏற்படும் செலவினங்களை எதிர்நோக்கவும் தொகுப்பு மானியம் வழங்கும் திட்டம் 2015 முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, முப்படையில் நிரந்தர படை அலுவலராக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்று வரும் படை வீரர்களுக்கு தொகுப்பு மானியம் ரூ.1லட்சம், முப்படையில் குறுகிய கால படைத் துறை அலுவலராக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்று வரும் படை வீரர்களுக்கு ரூ.50ஆயிரம், இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர பதவிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்று வரும் படைவீரர்களுக்கு ரூ.25ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த படை வீரர்கள் பயனடைய விரும்பினால் விவரங்களை அறிந்து கொள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.