மரம் விழுந்து சேதமான வீட்டுக்கு நிவாரணத் தொகை வழங்காததால் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்தவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
சிவகங்கை மாவட்டம் முத்தனேந்தல் அருகே உள்ள உடையான்பட்டியைச் சேர்ந்தவர் சாமிவிஜயராஜ்(52). இவர் வசித்து வரும் வீடு கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட சூறாவளி காற்றினால் மரம் விழுந்து சேதமடைந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தபட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நிவாரணத் தொகை வழங்கவில்லையாம்.
இதுகுறித்து,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் சாமிவிஜயராஜ் புகார் மனு அளிக்க வந்தார். அப்போது, பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சிறிய பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடம்பில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் சாமிவிஜயராஜை மீட்டு அழைத்துச் சென்றனர். சாமிவிஜயராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஆட்சியர் மலர்விழி கூறியதையடுத்து போலீஸார் அவரை விடுவித்தனர்.